அஸ்ஸாம் மாநில பெண் ஒருவர் இன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறி வசிப்பவர்களை அடையாளம் காண்பதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இதன் வரைவுப் பட்டியல், கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், சுமார் 40 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். தற்போது விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, என்.ஆர்.சி இறுதிப் பட்டியல் சனிக்கிழமை காலை வெளியிடப்பட்டது. இதிலிருந்து 19 லட்சம் (19,06,657) பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. முன்னதாக, மொத்தம் 3,30,27,661 பேர் தங்களின் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்திருந்தனர்.
இந்த சூழ்நிலையில், அசாமின் சோனித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். ஷெயேரா பேகன் என்ற பெண், என்.ஆர்.சி-யில் தனது பெயர் வருமா என்ற பதற்றத்தில், தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், சோனித்பூர் காவல் கண்காணிப்பாளர் சஞ்சித் கிருஷ்ணா கூறும் போது, அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இது நடந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் என்.ஆர்.சி.யில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது.