சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது என்று ஹைதராபாத் என்கவுன்டர் குறித்து பாஜக எம்.பி மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 4 பேர் வெள்ளிக்கிழமை அதிகாலை போலீஸாரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் நால்வரும் தப்பிச்செல்ல முயன்றதால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிய நிலையில், குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் குற்றவாளிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து மத்திய முன்னாள் அமைச்சரும், பாஜக எம்.பியுமான மேனகா காந்தி, 'ஹைதராபாத் என்கவுன்டர் அதிர்ச்சியான செய்தி. சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது. உங்கள் விருப்பத்திற்கேற்ப குற்றவாளிகளை நீங்கள் குற்றவாளிகளை சுட்டுக்கொல்ல முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தால் தூக்கிலிடப்படுவதுதான் சரியானது. சட்ட ரீதியாக சரியான முறையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். விருப்பத்திற்கேற்ப செயல்பட்டால் சட்டம், நீதிமன்றம், காவல்துறை எல்லாம் எதற்கு?' என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால், சமாஜ்வாதி கட்சி எம்.பி ஜெயா பச்சன், 'தாமதமாக வழங்கப்பட்ட நீதி' என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, குற்றவாளிகள் பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜெயா பச்சன் மக்களவையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.