
கபில்தேவ் அகர்வால்
லக்னௌ: நான் ஏன் அவர்கள் வீட்டுக்குப் போகவேண்டும்? என்று கலவரத்தில் இறந்த இஸ்லாமிய இளைஞர்களின் குடும்பத்தைப் புறக்கணித்த உத்தரபிரதேச அமைச்சரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தப்பட்டக் குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் தீவிரமடைந்து வன்முறை சம்பவங்களும் நடைபெறுகின்றன. அதனைத் தடுக்க பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தில் இந்து மதத்தைச் சார்ந்த ஓம் ராஜ் சைனி என்ற இளைஞரும், அனஸ் மற்றும் சுலைமான் ஆகிய இரு இஸலாமிய இளைஞர்களும் பலியாகினர். இவர்கள் அனைவருமே நெஹ்தர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் நான் ஏன் அவர்கள் வீட்டுக்குப் போகவேண்டும்? என்று கலவரத்தில் இறந்த இஸ்லாமிய இளைஞர்களின் குடும்பத்தைப் புறக்கணித்த உத்தரபிரதேச அமைச்சரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் கபில்தேவ் அகர்வால் கலவரத்தில் இறந்த ஓம் ராஜ் சைனியின் குடும்பத்தரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால் அதேநேரம் ஓரே பகுதியில் இருந்த போதிலும் அனஸ் மற்றும் சுலைமான் ஆகியோரின் குடும்பத்தினரை அவர் சந்திக்கவில்லை. இதுதொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது:
நான் ஏன் கலவரம் செய்தவர்களது இல்லத்திற்குச் செல்ல வேண்டும்? கலவரம் செய்து, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துபவர்களை எவ்வாறு சமூகத்தின் ஒரு பகுதியாக கருத இயலும்? நான் ஏன் அங்கு செல்ல வேண்டும்? இது இந்து இஸ்லாமியர்கள் சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல. நான் ஏன் கலவரக்காரர்களை பார்க்க வேண்டும்?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார். அவரது இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான துஜேந்திர திரிபாதி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.