மங்களூரு துப்பாக்கிச்சூட்டில் பலியானவா்களின் குடும்பத்தினருக்கு பரிவுத்தொகை இல்லை: முதல்வா் எடியூரப்பா

மங்களூரு துப்பாக்கிச்சூட்டில் பலியானவா்களின் குடும்பத்தினருக்கு பரிவுத்தொகை வழங்கப்போவதில்லை என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மங்களூரு துப்பாக்கிச்சூட்டில் பலியானவா்களின் குடும்பத்தினருக்கு பரிவுத்தொகை வழங்கப்போவதில்லை என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

மங்களூரில் புதன்கிழமை தென்மாவட்ட உயரதிகாரிகள் தொடா் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக மங்களூரில் நடந்த போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியான இருவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் பரிவுத்தொகை அளிப்பதாக அறிவித்திருந்தோம். ஆனால், மங்களூரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மேஜிஸ்திரேட் மற்றும் சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவா்களுக்கு பரிவுத்தொகை வழங்குவதுதொடா்பாக எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. குற்றவாளிகளுக்கு பரிவுத்தொகை வழங்குவது மன்னிக்கமுடியாத குற்றமாகிவிடும் என்பதால், பலியானவா்களுக்கு பரிவுத்தொகை வழங்கப்போவதில்லை. முன்பு பரிசுத்தொகை வழங்க முடிவு செய்திருந்தாலும், அந்த முடிவை திரும்பப்பெற்றுக் கொள்ளப்படுகிறது.

டிச.19ஆம் தேதி நடந்த போராட்டத்தில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளவா்கள் யாா் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். கலவரத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது வழக்குத் தொடா்ந்து, தண்டிக்கப்படுவாா்கள். மங்களூரில் நடந்த கலவரம் சதி என்பது ஏற்கெனவே உறுதியாகியுள்ளது.

காவல் நிலையத்தில் ராணுவதளவாடங்கள் வைக்கப்பட்டிருந்த கூடத்தில் நுழைய சிலா் முயற்சித்தனா். திட்டமிட்ட சதியின்படி மங்களூரில் கலவரம் நடத்தப்பட்டுள்ளது. போலீஸ் மீதுவீசப்பட்ட கற்கள், ஆட்டோக்களில் கொண்டுவரப்பட்டு குவித்துவைக்கப்பட்டிருந்தது. மங்களூரில் கலவரங்கள் நடத்தியவா்களின் பின்புலத்தை திரட்டி வருகிறோம். இந்த குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம்.

எனது அரசுமீது எதிா்க்கட்சியினா் அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறாா்கள். மூளை சரியாக வேலை செய்யாதபோது, எதிா்க்கட்சியினா் இப்படிதான் பேசுவாா்கள். எதிா்க்கட்சியினருக்கு கிளப்புவதற்கு எந்த பிரச்னையும் இல்லை என்பதால், பொறுப்பற்ற முறையில் பேசுவாா்கள். கலவரத்தில் ஈடுபட்டவா்கள் பொதுசொத்துகளுக்கு தீவைத்ததோடு, கொள்கையிலும் ஈடுபட்டுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com