புது தில்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் ஹிமாசல பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங், அவரது மனைவி மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியின்போது மத்திய அமைச்சராக இருந்த வீரபத்ர சிங், வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.10 கோடி சொத்து சேர்த்ததாக அவர் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கில் வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதீபா சிங் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய விசாரணை நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டுப் பதிவை முறையாக இறுதி செய்ய வேண்டியுள்ள நிலையில், அதன் மீதான அடுத்தகட்ட விசாரணை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதீபா சிங் ஆகியயோர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவானது நீதிபதி சுனில் கவுர் முன்னிலையில் புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "தான் எந்த விதமான உத்தரவையும் தற்போது பிறப்பிக்கப் போவதில்லை; முதலில் விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யட்டும்" என்று தெரிவித்தார்.
அதேசமயம் வீரபத்ர சிங் மனு மீது பதில் மனு தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிபதி, வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதீபா சிங் மீதான மனு வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.