
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி ஏந்திச் சென்ற இலங்கைப் பெண் சுவாமி தரிசனம் செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டார்.
சசிகலா (46) என்ற இலங்கைப் பெண் நேற்று இரவு தனது கணவர் சரவணமாறன், மகன் மற்றும் மேலும் சிலருடன் பம்பை வந்தார். பாஸ்போர்டில் அவரது வயது 46 என்று இருந்தது. அதையடுத்து, அவர் கருப்பை அகற்றப்பட்டதற்கான மருத்துவச் சான்றிதழை காவல்துறையினரிடம் காண்பித்தார்.
இதையடுத்து இரண்டு காவலர்கள் அவருடன் பாதுகாப்புக்குச் சென்று சுவாமியை தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர். ஆனால், 50 வயதுக்குட்பட்ட ஒரு பெண் ஐயப்பனை தரிசனம் செய்ய வந்து கொண்டிருப்பதாக பக்தர்களிடையே செய்தி பரவியதால், போராட்டம் வெடித்தது.
இந்த போராட்டத்தால், அப்பெண் மட்டும் திருப்பி அனுப்பப்பட்டார். அவருடன் சென்றவர்கள் சுவாமியை தரிசனம் செய்து திரும்பினர். அப்பெண் கிட்டத்தட்ட 18ம் படிவரை சென்ற பிறகு சுவாமியை தரிசிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டதால் மன வருத்தம் அடைந்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...