
பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர், முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்டோர்.
சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையின் ஆவணங்கள் ஒரு குடும்பம் உத்தரவிட்டதன் பேரில் மூடி மறைக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியபோது, ஒரு குடும்பத்தின் உத்தரவுப்படி, 1984-ஆம் ஆண்டு சீக்கியர் கலவர வழக்கு தொடர்பான ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதையெல்லாம் தோண்டி எடுத்தது. சீக்கிய கலவர வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தோம். அதன் பலன் என்னவென்பதை நீங்களே அறிவீர்கள் என்றார்.
சீக்கிய கலவர வழக்கில் தொடர்புடைய மூத்த அரசியல் தலைவர் சஜ்ஜன் குமாரை 24 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் அண்மையில் குற்றவாளி என தீர்ப்பளித்து சிறைக்கு அனுப்பியதை குறிப்பிடும் வகையில் மோடியின் பேச்சு அமைந்தது.
அதே சமயம், சீக்கிய கலவர வழக்கில் தொடர்புடைய வேறு சிலருக்கு முதல்வர் பதவி வழங்கி காங்கிரஸ் கட்சி அழகு பார்ப்பதாகவும் மோடி குற்றம்சாட்டினார்.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக மாபெரும் வாக்குறுதியை அளித்துவிட்டு, பின்னர் அதிலிருந்து பின்வாங்குகிறது என்று மோடி தெரிவித்தார்.
கலவரத்தை தூண்டியதில் முக்கிய பங்கு வகித்ததாக, பாதிக்கப்பட்ட சீக்கிய மக்களால் குற்றம்சாட்டப்படும் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் அண்மையில் மத்தியப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றது இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...