
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி ஏந்திச் சென்ற 46 வயது இலங்கைப் பெண் திருப்பி அனுப்பப்பட்டார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரண்டு பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததை அடுத்து கேரளாவில் நேற்று போராட்டம் வெடித்தது.
இந்த நிலையில், இலங்கைப் பெண் ஒருவர் தனது குடும்பத்தோடு இருமுடி ஏந்தி நேற்று இரவு பம்பை வந்தார். அவர் தனக்கு கருப்பை அகற்றப்பட்டதற்கான மருத்துவச் சான்றிதழை காவல்துறையினரிடம் காண்பித்தார்.
இதையடுத்து இரண்டு காவலர்கள் அவருடன் பாதுகாப்புக்குச் சென்று சுவாமியை தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர். ஆனால், 50 வயதுக்குட்பட்ட ஒரு பெண் ஐயப்பனை தரிசனம் செய்ய வந்து கொண்டிருப்பதாக பக்தர்களிடையே செய்தி பரவியதால், போராட்டம் வெடித்தது.
இந்த போராட்டத்தால், அப்பெண் மட்டும் திருப்பி அனுப்பப்பட்டார். அவருடன் சென்றவர்கள் சுவாமியை தரிசனம் செய்து திரும்பினர். அப்பெண் கிட்டத்தட்ட 18ம் படிவரை சென்ற பிறகு சுவாமியை தரிசிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டதால் மன வருத்தம் அடைந்தார்.
இருமுடி ஏந்தி உண்மையான பக்தியோடு சபரிமலைக்கு வந்தேன். எனது மருத்துவச் சான்றிதழைக் காண்பித்தும், காவலர்கள் என்னை சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக இலங்கைப் பெண் ஒருவர் நேற்று இரவு சுவாமியை தரிசனம் செய்ததாக செய்திகள் வெளியானதால் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் அவர் திரும்பி வந்து சுவாமியை தரிசிக்கவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.