Enable Javscript for better performance
மேகாலய சுரங்க மீட்புப் பணி: உச்சநீதிமன்றம் அதிருப்தி: சிக்கியவர்களை உயிருடனோ, சடலமாகவோ விரைந்து மீட்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மேகாலய சுரங்க மீட்புப் பணி: உச்சநீதிமன்றம் அதிருப்தி: சிக்கியவர்களை உயிருடனோ, சடலமாகவோ விரைந்து மீட்டெடுங்கள்

    By DIN  |   Published On : 04th January 2019 02:59 AM  |   Last Updated : 04th January 2019 02:59 AM  |  அ+அ அ-  |  


    மேகாலய மாநிலத்தில் ஆற்று வெள்ளம் புகுந்த நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியுள்ள 15 சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதில் தொடர்ந்து 22 நாள்களாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அந்த மாநில அரசின் மீட்பு பணி நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், சுரங்கத்தினுள் சிக்கியுள்ளவர்களை உயிருடனோ அல்லது சடலமாகவோ விரைந்து மீட்டெடுங்கள் என்றும் தெரிவித்துள்ளது.
    மேகாலயத்தின் கிழக்கு ஜைந்தியா மாவட்டத்தில் உள்ள லும்தாரி கிராமப் பகுதியில் சட்டவிரோதமாக நிலக்கரிச் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் அருகே பாயும் லைடெய்ன் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததை அடுத்து, 370 அடி ஆழமுள்ள அந்த நிலக்கரிச் சுரங்கத்தில் கடந்த மாதம் 13-ஆம் தேதி வெள்ள நீர் புகுந்தது. இதில் 15 தொழிலாளர்கள் அந்தச் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அங்கு சிக்கி 20 நாள்களுக்கு மேல் ஆகியும், அவர்களை மீட்பதில் 
    இன்னும் சிக்கல் நிலவி வருகிறது.
    இதனிடையே, மீட்புப் பணியை துரிதப்படுத்த மத்திய அரசுக்கும், அரசுத் துறையினருக்கும் உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் ஆதித்யா என். பிரசாத் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். 
    அந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி மற்றும் எஸ். அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அவசர வழக்காக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கூறியதாவது:
    சுரங்கத்தினுள் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்தது. உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் எனும்போது, அதற்கு விரைவான, பயனுள்ள நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தேசிய பேரிடர் மீட்பு படையினர் 72 பேர், மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும்போதும் இன்னும் யாரையும் மீட்க இயலவில்லை என்றால், ராணுவத்தின் உதவியை நாடி இருக்க வேண்டும். ராணுவம் உதவி செய்ய தயாராக உள்ளது. இந்த நேரத்தில் மாநில அரசுக்கு மத்திய அரசு உதவி செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். மேலும், இந்த பொது நல மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். 
    அதையடுத்து மாநில அரசு மேற்கொண்ட மீட்பு பணி நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு சார்பாக வழக்குரைஞர் தெரிவித்தார். அதைக் கேட்ட நீதிபதிகள், மீட்பு பணி நடவடிக்கைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அவர்களை ஏன் இன்னும் மீட்கவில்லை? மாநில அரசின் மீட்பு பணி நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை. அவர்களை உயிருடனோ அல்லது சடலமாகவோ விரைந்து மீட்டெடுங்கள். அவர்கள் அனைவரும் உயிருடன் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் என்று கூறினர். 
    மீட்பு பணியில் முன்னேற்றமில்லை: இதனிடையே, சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து 22-ஆவது நாளாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. சுரங்கத்தினுள் உள்ள நீரை வெளியேற்றும் பணியில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்று மீட்பு பணி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் 5 பேர் வியாழக்கிழமை காலை மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீரின் மட்டம் மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 
    தற்போது சுரங்கத்தின் நீர்மட்டம் 160 அடிக்கும் மேல் உள்ளது. அதை 100 அடியாக குறைத்த பின்பு நீச்சல் வீரர்கள் சுரங்கத்தினுள் அனுப்பப்படுவர் என்றார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp