
திருவனந்தபுரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றால் சபரிமலை தலைமை தந்திரி பதவி விலகி இருக்க வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் புதன்கிழமை சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து சபரிமலை தந்திரி கண்டரரூ ராஜீவரூ, கோயிலின் நடையை அடைத்து பரிகார பூஜைகள் மேற்கொண்டார். இதற்கு முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சபரிமலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை காலை சன்னதிக்குள் பெண்கள் நிநுழைந்தவுடன் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோயிலின் நடையை அடைத்து பாரம்பரிய நடைமுறையை மீறி பரிகார பூஜை செய்துள்ளார் தந்திரி. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும். இந்த வழக்கில் அவரும் ஒரு வாதி என்பதால், அவரது கருத்தையும் கேட்டே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். நீதிமன்ற தீர்ப்பை தந்திரி ஏற்காவிட்டால் அவர் பதவி விலகியிருக்க வேண்டும் என விஜயன் தெரிவித்தார்.
இந்நிலையில், சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில், சிலர் காயமடைந்தனர்.
இதனிடையே முதல்வர் பினராயி விஜயனிடம் வன்முறை தொடர்பாக உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரள ஆளுநர் பி.சதாசிவம் கோரினார்.