கட்டாயத் தேர்ச்சிக் கொள்கையை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கல்விக் கொள்கையை ரத்து செய்வதற்கான சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில்


பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கல்விக் கொள்கையை ரத்து செய்வதற்கான சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது. எனினும், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மசோதா மீதான விவாதத்தின்போது, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பதிலளித்துப் பேசியதாவது:
கட்டாயத் தேர்ச்சிக் கொள்கையில் திருத்தம் செய்வதற்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று 25 மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. அதன் பிறகே, இந்த சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்ற நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 
இந்த மசோதா மூலம், சரிவர படிக்காத மாணவர்களை அதே வகுப்பில் நிறுத்தி வைப்பதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கட்டாயத் தேர்ச்சிக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. ஆனால், அந்த முடிவால் மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பலருக்கு 3-ஆம் வகுப்பு கணிதம் கூட தெரியவில்லை. எனவே, அந்தக் கொள்கையை ரத்து செய்வதற்கான அவசியம் ஏற்பட்டது.
புதிய சட்டத் திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அடுத்த இரு மாதங்களில் மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com