புது தில்லி: 21-ம் நூற்றாண்டில் பிறந்த இளைஞர்கள் தேசத்தை கட்டமைக்கும் பயணத்தை தொடங்கிவிட்டார்கள் என்று தன்னுடைய மன் கி பாத் உரையில் மோடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வரிசையில் இந்த ஆண்டின் முதல் மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஞாயிறன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது-
நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 21-ம் நூற்றாண்டில் பிறந்த இளைஞர்கள் முதல் முறையாக தங்கள் வாக்குகளை பதிவு செய்ய காத்திருக்கிறார்கள். இதன்மூலம் தேசத்தை கட்டமைக்கும் தங்கள் பயணத்தையும் தொடங்கிவிட்டார்கள். ஒவ்வொருவரின் கனவும், தேசத்தின் கனவும் நனவாகும் காலம் இப்போது வந்துவிட்டது.
வாக்களிக்கும் வயதை எட்டிய இளைஞர்கள் ஒவ்வொருவரும் வரும் தேர்தலில் தங்களின் ஜனநாயகக் கடமையான வாக்களிப்பதை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ஒருவர் வாக்களிக்க முடியாவிட்டால், அது அவருக்கு நிச்சயம் வலியைத் தர வேண்டும்.
பிரபல ஆளுமைகள் தாமாக முன்வந்து மக்களுக்கு வாக்களிக்கும் கடமை குறித்தும், வாக்காளராக பதிவு செய்வது மற்றும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.
தகுதியுடைய இளம் வாக்காளர்களும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்வார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். அவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய ஜனநாயகம் மேலும் வலுவடையும்
நம்முடைய மாணவர்கள் தயாரித்த கலாம் சாட் எனும் சிறிய செயற்கைக்கோள் இஸ்ரோ ஏவிய ராக்கெட் மூலம் விண்வெளியை அடைந்திருக்கிறது.
வரும் 30-ம் தேதி மகாத்மா காந்தி நினைவுநாள் அனுசரிக்கப்பட உள்ளது. அன்று அனைவரும் அவருக்கு தங்கள் நினைவஞ்சலியை செலுத்த வேண்டும்.
இவ்வாறு தனது உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.