
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளில் 4 முதல் 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம், சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதி ஒருவர் வெடிபொருள்கள் நிரப்பிய வாகனத்தை மோதி வெடிக்கச் செய்ததில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். தேசிய அளவில் இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இத்தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை துல்லியத் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி மக்களவையில் பதிலளித்து கூறியதாவது:
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய விசாரணையின் அடிப்படையில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினருக்கு புல்வாமா தாக்குதலில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள்தான் இத்தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியுள்ளனர். இதில் நேரடியாகத் தொடர்புடைய பயங்கரவாதிகளில் 4 முதல் 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.