
டிக் டாக் விபரீதங்கள் ஒன்றா இரண்டா.. அதில் கேரள போலீஸும் தப்பவில்லை. கைதியுடன் ஆட்டம் போட்ட கேரள போலீஸின் டிக் டாக் விடியோதான் இன்றைய வைரல் நியூஸ்.
விசாரணைக் கைதி ஒருவரை அழைத்துக் கொண்டு காவல்துறை வாகனத்தில் செல்லும் போது காவலர்களுக்கு ஒரு யோசனை வந்துள்ளது. அதுதான் டிக்டாக் விடியோ, வாகனத்தில் சென்று கொண்டே பாட்டுக்கு நடனமாடியபடியும், ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு, கைதியை இறக்கி அவருடன் இணைந்து நடனமாடியபடி டிக் டாக் விடியோவை காவலர்கள் பதிவிட்டுள்ளனர்.
காவல்துறை வாகனம் பின்னால் இருக்க, 3 காவலர்கள், ஒரு கைதியுடன் மலையாளப் பாடலுக்கு ஆட்டம் போடும் இந்த விடியோ வைரலானது.
அடுத்து என்ன எல்லோருக்கும் தெரிந்ததுதானே.. பணி நேரத்தில் அதுவும் ஒரு கைதியோடு இணைந்து இப்படி டிக்டாக் விடியோ பதிவிட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. கூடிய விரைவில் நடனமாடிய காவல்துறையினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
ஏற்கனவே டிக்டாக் விடியோவால் பல குடும்பங்கள் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும் போது, டிக் டாக் விபரீதங்களைத் தடுக்க காவல்துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் காவல்துறையே, இப்படி டிக்டாக் விடியோவுக்கு இரையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.