அகந்தை குணத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது: பாஜகவினருக்கு மோடி எச்சரிக்கை

பாஜகவினரின் அகந்தை குணத்தையும், தவறான நடத்தையையும் பொறுத்துக்கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்த பாஜகவினர். 
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்த பாஜகவினர். 
Updated on
1 min read


பாஜகவினரின் அகந்தை குணத்தையும், தவறான நடத்தையையும் பொறுத்துக்கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் பாழடைந்த கட்டடம் ஒன்றை இடிக்கச் சென்ற நகராட்சி அதிகாரியை பாஜக எம்எல்ஏவும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனுமான ஆகாஷ் விஜய்வர்கியா கடந்த வாரம் கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். நகராட்சி அதிகாரி தாக்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், தான் செய்தது சரிதான் என்று கூறிவரும் அவர், இச்சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கவும் மறுத்து வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து பாஜக மூத்த தலைவர்கள் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில், நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி தெரிவித்ததாகக் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
ஒரு சில நபர்களால் கட்சிக்குக் களங்கம் ஏற்பட்டு வருகிறது. அவர்கள் யாராக இருந்தாலும், யாருடைய மகனாக இருந்தாலும் அகந்தை குணத்தையும், தவறான நடத்தையையும் பொறுத்துக்கொள்ள முடியாது. 
பாஜக தலைவர்கள் அனைவரும் கடும் பாடுபட்டு கட்சிக்கு வெற்றி தேடித் தருகின்றனர். ஆனால், ஒரு சிலர் தங்களது நடவடிக்கைகளால் கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கின்றனர். மனம் போன போக்கில் சிலர் செயல்படக் கூடாது. கட்சியைச் சேர்ந்த சிலர் தவறு செய்தால், உடனே மன்னிப்பு கேட்டாக வேண்டும்.

இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் மோடி எச்சரித்ததாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தின்போது, பிரதமர் மோடி எந்தச் சம்பவத்தையும் குறிப்பிடாதபோதிலும், ஆகாஷ் வர்கியாவைக் குறிப்பிட்டு பேசியதாகவே கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவும் பங்கேற்றார். 
முன்னதாக, கூட்டத்தின் தொடக்கத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com