பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி கூடுதல் நிதி அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் கூறுகையில், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.1 லட்சம் கோடியாக குறைந்துவிட்டது. திவால் சட்டத்தை அமல்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கடந்த 4 ஆண்டுகளில் வங்கிகள் ரூ.4 லட்சம் கோடி வாராக் கடனை மீட்டுள்ளன. இதையடுத்து, பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.70,000 கோடி நிதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வங்கிகளின் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கவும், தொழில்களை விரிவுபடுத்தவும் எளிதில் கடன் கிடைப்பதால் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.
பொதுத் துறை வங்கிகளை ஒருங்கிணைக்கவும் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். மொத்தம் 8 பொதுத் துறை வங்கிகள் மட்டுமே இருக்கும் அளவுக்கு வங்கிகள் ஒன்றுடன் மற்றொன்று இணைக்கப்படும். இந்த நடவடிக்கைகள் எவ்வித பிரச்னையும் இன்றி மேற்கொள்ளப்படும் என்றார்.