புது தில்லி: அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தில்லியில் காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம் தில்லியில் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். முறைப்படி ஆகஸ்ட் மாதம் தமிழகத்திற்கு கர்நாடகா திறக்க வேண்டிய காவிரி நீரின் அளவு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பின் காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் கூடியிருந்த செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக அணைகளில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அணைகளுக்கு நீர்வரத்து குறைவாக இருப்பினும் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தொடர்ந்து நீர்திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.