பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான அமர்வு ஒத்திவைத்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், "10 சதவீத இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை. பொதுப் பிரிவில் இருக்கும் ஏழைகளுக்கு பலன் அளிக்கும் முயற்சியாகவே இந்த 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது" என்றார்.
மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், "அரசியலமைப்புச் சட்டத்தின் ஆணிவேரான சமத்துவத்தின் அர்த்தத்தையே 103-வது சட்டத்திருத்தம் மாற்றியமைக்கிறது. எனவே, இந்த விவகாரத்தை அதிக எண்ணிக்கையுடைய நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட வேண்டும்" என்றார்.
இதையடுத்து கடந்த ஜூலை 1-ஆம் தேதி, இந்த விவகாரம் குறித்து நீண்ட விசாரணை தேவை என்று கருதிய உச்சநீதிமன்றம், 10 சதவீத இடஒதுக்கீடு குறித்த மத்திய அரசின் முடிவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவது குறித்தான தீர்ப்பை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு இன்று (புதன்கிழமை) ஒத்திவைத்தது.