உ.பி: பெண் குழந்தை கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

உத்தரப் பிரதேசம், அலிகரில் இரண்டரை வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களோடு சேர்த்து

உத்தரப் பிரதேசம், அலிகரில் இரண்டரை வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களோடு சேர்த்து இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 அலிகரின் தப்பல் நகரைச் சேர்ந்த இரண்டரை வயது பெண் குழந்தையை காணவில்லை என்று அக்குழந்தையின் பெற்றோர் கடந்த 30-ஆம் தேதி தப்பல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், குழந்தையின் வீட்டுக்கு அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் கடந்த 2-ஆம் தேதி அந்தக் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தான் கடனாக பெற்ற ரூ. 10,000 தொகையை திருப்பிச் செலுத்தாததால், தனது குழந்தையை கடத்தி கொலை செய்து விட்டதாக அந்த குழந்தையின் தந்தை குற்றம்சாட்டினார்.
 இதுதொடர்பாக ஜாஹித்(27), அஸ்லாம்(43) ஆகிய இருவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை காவல் துறையினர் கைது செய்தனர்.
 அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, அந்த குழந்தையின் தந்தை கடனாக பெற்ற ரூ. 10,000 தொகையை திருப்பிச் செலுத்தாததால், அந்த குழந்தையை கொலை செய்து விட்டதாக, இருவரும் ஒப்புக் கொண்டனர்.
 அக்குழந்தையின் பிரேத பரிசோதனையில், "மூச்சுத் திணறல்' காரணமாக குழந்தை உயிரிழந்தது என்று கூறப்பட்டிருந்தாலும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
 இதனிடையே, வழக்கு பதிவு செய்வதிலும், விசாரணை மேற்கொள்வதிலும் காவல் துறையினர் கவனக்குறைவுடன் செயல்பட்டதாக அக்குழந்தையின் உறவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. நிலைமையை கட்டுக்குள் வைப்பதற்காக, பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 அதையடுத்து இந்த விவகாரத்தில் கவனக்குறைவுடன் செயல்பட்டதற்காக, காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் 5 போலீஸார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பெண் ஆய்வாளர் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
 மேலும் இருவர் கைது..: இந்நிலையில், ஜாஹித்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிறப்பு விசாரணைக் குழு சனிக்கிழமை சோதனை நடத்தியது. அதன் பின்னர், ஜாஹிதின் மனைவி ஷாகுஃப்தா மற்றும் சகோதரர் மெஹந்தி ஹாசனை இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக அலிகர் காவல் துறை கண்காணிப்பாளர் குல்ஹரி கூறுகையில், "கைது செய்யப்பட்ட அஸ்லாம் மீது ஏற்கெனவே இரண்டு வழக்குகள் உள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மேல் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குண்டர் சட்டத்தின் கீழ் வேறொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு அவர்கள் உள்ளாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தடயவியல் ஆய்வாளர்கள் குழந்தையின் உடலை பரிசோதனை செய்து வருகின்றனர்.
 குற்றவாளிகளின் செல்லிடப்பேசி அழைப்பு குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் அவர்களுக்கு ஆதரவாக வாதாடுவதற்கு எந்த வழக்குரைஞரும் ஆஜராக மாட்டார்கள். அதனால் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com