
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், அரசு தரப்பும், குற்றவாளிகள் தரப்பும் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
பதான்கோட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இரு தரப்பினரும் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பதான்கோட் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
முக்கிய குற்றவாளி சாஞ்சி ராம் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், தடையங்களை அழித்த போலீஸார் 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. சாஞ்சி ராமின் மகன் விஷாலுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தேவையான ஆதாரம் தாக்கல் செய்யப்படாததால், சந்தேகத்தின் பலனை அவருக்கு வழங்கி நீதிமன்றம் விடுவித்தது.
இந்த நிலையில், விஷால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்க வலியுறுத்தியும் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போல தண்டனையை ரத்து செய்யக் கோரி குற்றவாளிகள் தரப்பிலும் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.