பார் கவுன்சில் தலைவர் கொலை எதிரொலி: உத்தரப் பிரதேச நீதிமன்றங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு

உத்தரப் பிரதேசத்தில் பார் கவுன்சில் பெண் தலைவர் வழக்குரைஞர் நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதை அடுத்து, மாநிலம் முழுவதும் நீதிமன்றங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று அந்த மாநில முதல
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் பார் கவுன்சில் பெண் தலைவர் வழக்குரைஞர் நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதை அடுத்து, மாநிலம் முழுவதும் நீதிமன்றங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில பார் கவுன்சில் தலைவர் தர்வேஸா சிங் யாதவ், வழக்குரைஞர் ஒருவரால் புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அவரைக் கொலை செய்த வழக்குரைஞரும் தன்னைத்தானே துப்பாக்கியில் சுட்டுக் கொண்டார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆக்ரா நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தர்வேஸாவின் உடல் எடாவா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த கொலை சம்பவத்தை வைத்து மாநில பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகளான சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்டவை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் அக்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், பார் கவுன்சில்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மாநில அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு விஷயத்தில் மாநில அரசு எவ்வித சமரசத்துக்கும் இடம் கொடுக்காது. பார் கவுன்சிலின் முதல் பெண் தலைவரான தர்வேஸா சுட்டுக் கொல்லப்பட்டது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com