புது தில்லி: ஊழலுக்கு எதிராக விசாரணை நடத்தும் நாட்டின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமனம் செய்யப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஊழலுக்கு எதிராக விசாரணை நடத்தும் தன்னாட்சி அமைப்பாக கடந்த 2014 ல் லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழுவை பிரதமர் தலைமையிலான குழு முடிவு செய்யும். இந்தக்குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகிய இருவரும் அடங்குவர்.
லோக்பால் அமைப்பிற்கு விரைவில் தலைவரை நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில் ஊழலுக்கு எதிராக விசாரணை நடத்தும் நாட்டின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமனம் செய்யப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான நியமனக்குழு அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்றும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரிரு நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 ஆண்டுகள் பணியாற்றிய பினாகி சந்திர கோஸ் 2017-ல் பணி ஓய்வு பெற்றார்.