புது தில்லி: உங்கள் குழந்தைகள் காவலாளிகளாக வேண்டும் என்றால் மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று தில்லி முதல்வர் கேஜரிவால் கிண்டல் செய்துள்ளார்.
ரஃபேல் ஊழல் விவகாரத்தில் 'திருடனாக மாறிய காவலாளி' என்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுலின் தீவிர விமர்சனத்தை சமாளிக்கும் பொருட்டு, 'நானும் கூட காவலாளி' தான் என்கிற பிரசாரத்தை பிரதமர் மோடி ட்விட்டரில் மேற்கொண்டு வருகிறார்.
பா.ஜனதா தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களும் தங்கள் பெயர்களுக்கு முன் காவலாளி என்னும் பொருள்படும் 'சவுகிதார்' எனும் வார்த்தையை சேர்த்துப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் உங்கள் குழந்தைகள் காவலாளிகளாக வேண்டும் என்றால் மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று தில்லி முதல்வர் கேஜரிவால் கிண்டல் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடி ஒட்டுமொத்த தேசத்தையும் காவல்காரராக மாற்ற முயற்சிக்கிறார். நாட்டு மக்கள் தங்கள் குழந்தைகளை காவல்காரராக உருவாக்க வேண்டும் என்று விரும்பினால், அவர்கள் தாராளமாக மோடிக்கு வாக்களிக்கலாம்.
ஆனால் தங்கள் குழந்தைக்கு நல்ல கல்வி தேவை, எதிர்காலத்தில் மருத்துவராகவோ, பொறியாளராகவோ, வழக்கறிஞராகவோ அவர்கள் மாற வேண்டும் என்று மக்கள் விரும்பினால் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.