
மிஸோரம் மாநிலத்தில் மீண்டும் பூரண மதுவிலக்கைக் கொண்டு வருவதற்கான மசோதா, அந்த மாநில சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மிஸோரம் மாநிலத்தில் கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த பூரண மதுவிலக்கு, கடந்த 2015-ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின்போது விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்தச் சூழலில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை மீண்டும் அமல்படுத்துவோம் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வாக்குறுதி அளித்த மிஸோ தேசிய முன்னணி, அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான மசோதா, சட்டப் பேரவையில் புதன்கிழமை கொண்டு வரப்பட்டது.
அந்த மசோதாவைக் கொண்டு வந்து பேசிய சட்ட அமலாக்கம், சுங்கத் துறை அமைச்சர் கே. பெய்ச்சுவா, பொதுமக்களின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிப்பதால் மாநிலம் முழுவதும் மது தயாரிப்பு, இறக்குமதி, விற்பனை, கொள்முதல் ஆகியவற்றுக்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, வாக்கெடுப்புக்கு விடப்பட்ட அந்த மசோதாவுக்கு கட்சி பேதமின்றி அனைத்து எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்தனர். அதையடுத்து அந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...