
சபரிமலை கோயிலில் பெண் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது தொடர்பான சர்ச்சையை பல்வேறு கோணங்களில் அலசும் புதிய புத்தகம் ஒன்று விரைவில் வெளியாகவிருக்கிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: சபரி மலையிலுள்ள ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.
அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை மையப்படுத்தி கேரளம் முழுவதும் போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், சபரிமலை சர்ச்சையை பல்வேறு கோணங்களில் அலசி ஆராயும் பல்வேறு கட்டுரைகள் அடங்கிய அடங்கிய புத்தகத்தை சபரிமலையும், பெண்களும் என்ற பெயரில் பிரபல எழுத்தாளர் லக்ஷ்மி ராஜீவ் தொகுத்துள்ளார்.
மலையாளத்தில் வெளியாகும் இந்தப் புத்தகத்தை அமேஸான் வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தின் ஈகா பதிப்பகம் வெளியிடுகிறது. மலையாள எழுத்தாளர்கள் கே. சச்சிதானந்தன், ஏ.ஜே. தாமஸ், எம். பாலகோவிந்தன் உள்ளிட்டோரது கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து எழுத்தாளர் லக்ஷ்மி ராஜீவ் கூறுகையில், சபரிமலை விவகாரத்தில் ஆரம்பம் முதல் தாம் ஆர்வம் காட்டியதாகவும், வலதுசாரி குழுக்களின் மிரட்டல் காரணமாக தாம் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த புதிய புத்தகத்தை, திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை (செப். 29) நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியொன்றில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிடவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...