
வாக்குப்பதிவை புறக்கணிக்க வேண்டும் என மிரட்டல் விடுத்து பாஜக தலைவர் வீடு நக்ஸல்களால் குண்டு வைத்து புதன்கிழமை தகர்க்கப்பட்டது. பிகார் மாநில பாஜக தலைவர் அனுஜ் குமார் வீட்டில் இச்சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. அப்போது அந்த வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த தாக்குதலுக்குப் பின்னர் நக்ஸல்கள் அங்கு ஒரு போஸ்டரை விட்டுச்சென்றுள்ளனர். அதில், வருகிற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுமார் 30 நக்ஸல்கள் வெடிபொருட்களுடன் வந்து இச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்று கயா காவல்நிலைய மூத்த போலீஸ் அதிகாரி ராஜீவ் மிஷ்ரா, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஐக்கிய ஜனதாதளக்கட்சியில் இருந்து எம்எல்சி உறுப்பினராக அனுஜ் குமார் செயல்பட்டுள்ளார். மேலும் நக்ஸல்களின் ஹிட் லிஸ்டில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...