இந்தியாவில் அகங்காரத்திற்கு மன்னிப்புக் கிடையாது: மோடிக்கு பிரியங்கா எச்சரிக்கை
ஹிசார்: இந்தியாவில் அகங்காரத்திற்கு எப்போதுமே மன்னிப்புக் கிடையாது என்று பிரதமர் மோடிக்கு, காங்கிரசின் பிரியங்கா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி சமீபத்தில் தனது தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜிவ் காந்தியை ஊழல்வாதி என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார். கடந்த 1980–களில் பரபரப்பாக பேசப்பட்ட போபர்ஸ் ஊழலில் ராஜீவ் காந்தியை தொடர்புபடுத்திதான் பிரதமர் மோடி இவ்வாறு பேசியிருந்தார்..
அவரது பேச்சுக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்தியாவில் அகங்காரத்திற்கு எப்போதுமே மன்னிப்புக் கிடையாது என்று பிரதமர் மோடிக்கு, காங்கிரசின் பிரியங்கா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹரியாணாவின் ஹிசார் நகரில் செவ்வாயன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி பேசியதாவது:
பேசுவதற்கு வேறு எந்தப் பிரச்சினையையும் கிடைக்கவிவ்ல்லை என்பதால் என்னுடைய குடும்பத்தை அவமதிக்கிறார்கள். இந்தியாவில் ஒருபோதும் அகங்காரத்திற்கு மன்னிப்பு என்பதே கிடையாது.
வரலாறு நமக்கு வழங்கும் ஆதாரமும் இதுதான், மகாபாரதத்தைநாம் ஆதாரமாக கொள்ளலாம். துரியோதனனிடமும் இருந்த அகங்காரம்தான் தற்போது பிரதமர் மோடியிடமும் உள்ளது. பகவான் கிருஷ்ணர் துரியோதனிடம் சமரசம் பேச முயற்சி செய்தபோது, அவன் கிருஷ்ணனை சிறைப்பிடிக்க முயற்சித்தான். அதுவே அவனது வீழ்ச்சிக்கு அடிகோலியது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.