
பஞ்சாபில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு முதல்வர் அமரீந்தர் சிங்கும், கட்சியின் பொது செயலாளர் மற்றும் பஞ்சாப் தேர்தல் பொறுப்பாளருமான ஆஷா குமாரியும்தான் காரணம் என்று பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சித்துவின் மனைவி நவ்ஜோத் கெளர் சித்து குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: முதல்வர் அமரீந்தர் சிங், ஆஷா குமாரி ஆகிய இருவரும், எனக்கு எம்.பி.யாக தகுதியில்லை என்று கருதியதாலோ என்னவோ, எனக்கு மக்களைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க மறுத்து விட்டார்கள். கடந்த ஆண்டு அமிருதசரஸில் நடைபெற்ற தசரா ரயில் விபத்து காரணமாக இத்தொகுதியில் போட்டியிட்டால் என்னால் வெற்றி பெற இயலாது என்று கூறி விட்டனர்.
அமரீந்தர் சிங் எங்களது இளைய கேப்டனாக விளங்குபவர். ராகுல் காந்தியே எங்கள் மூத்த கேப்டன் ஆவார். எங்களது இளைய கேப்டன், பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் தன்னால் மட்டுமே வெற்றி பெற வைக்க முடியும் என்கிறார். எனவே, இந்த முறை தேர்தல் பிரசாரத்தில் நான் பங்கேற்கப் போவதில்லை.
முதல்வர் அமரீந்தர் சிங்கும், ஆஷா குமாரியும் தேர்தல் பிரசாரத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்களாக இருப்பர். அதேசமயம், ராகுல் காந்தி கூறும் தொகுதிகளில் எல்லாம், சித்து பிரசாரம் மேற்கொள்வார் என்று அதிருப்தியடைந்துள்ள நவஜோத் கெளர் சித்து தெரிவித்தார்.
முன்னதாக, சண்டீகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கௌர் கேட்டிருந்தார்.
இந்நிலையில், அமிருதசரஸில், தற்போதைய காங்கிரஸ் எம்.பி.யானகுர்ஜித் சிங் அஜ்லாவுக்கே, கட்சி மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.
தற்போதைய, அமிருதசரஸ் சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவாகவும், அமரீந்தர் சிங்கின் அமைச்சரவையில் அமைச்சராகவும் நவ்ஜோத் சிங் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.