
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், அல்வர் மாவட்டத்தில் தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் 5 பேருக்கு எதிராக காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அல்வரில் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணை, வழிமறித்த கும்பல், கணவரின் கண்ணெதிரே அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது.
இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு தொடர்பாக, 5 பேருக்கு எதிராக காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
3 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை..: இதனிடையே, அல்வார் உள்பட வெவ்வேறு இடங்களில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக காவல் துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அல்வரைச் சேர்ந்த 15 வயது பெண், உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, 3 சிறுவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தை கண்டறிந்த உறவினர்கள், சிறுவர்கள் மூவரையும் தாக்க முயற்சித்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் தப்பி ஒடிவிட்டார். மற்ற இரு சிறுவர்களையும் பிடித்த உறவினர்கள், அவர்களை கடுமையாக தாக்கினர். அதில் ஒருவர் உயிரிழந்தார் என்று அந்த அதிகாரி கூறினார்.
இதனிடையே, சுரு மாவட்டத்தில் 6 வயது சிறுமியை உறவினர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும், டோல்பூரில் 6 வயது சிறுமியை 18 வயது இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.