
சிம்லா: ஹிமாசலப் பிரதேச மாநிலம், தஷிகாங் என்ற கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிதான் உலகின் மிக உயரமான பகுதியில் உள்ள வாக்குச்சாவடியாகும்.
மக்களவை கடைசிக் கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இதில், தஷிகாங் கிராமத்திலும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் 49 பேர் வாக்களிக்க உள்ளனர்.
ஹிமாசலப் பிரதேச தேர்தல் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், "தஷிகாங் வாக்குச்சாவடி கடல்மட்டத்திலிருந்து 15,256 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தஷிகாங் அருகே உள்ள ஹிக்கிம் வாக்குச்சாவடிதான் இதற்கு முன்பு உலகின் உயரமான இடத்தில் உள்ள வாக்குச்சாவடியாக இருந்தது. 2017 சட்டப்பேரவைத் தேர்தலின்போது சில தொழில்நுட்பக் காரணங்களால் தஷிகாங்குக்கு வாக்குச்சாவடி மாற்றப்பட்டது. ஹிமாசலில் மிகக் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடி கின்னௌர் மாவட்டத்தில் உள்ளது. கா என்றழைக்கப்படும் அந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 17 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்' என்றார்.