
சண்டீகர்: பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், ஹிந்தி நடிகருமான சன்னி தியோல் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறியதாக கூறி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குருதாஸ்பூர் தொகுதிக்குள்பட்ட பதான்கோட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாஜக சார்பில் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரசாரத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட காலம் கடந்த பிறகும், சன்னி தியோல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், பிரசாரத்தின்போது, 200க்கும் மேற்பட்ட மக்களை திரட்டி, அதிக சப்தத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கியை பயன்படுத்தியதாகவும், பிரசாரத்தை 48 மணி நேரத்துக்கு முன்பே நிறைவு செய்யுமாறு உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு மீறப்பட்டுள்ளதால், அதற்கான விளக்கத்தை அளிக்குமாறு பாஜக வேட்பாளர் சன்னி தியோலுக்கு நோட்டீஸில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சன்னி தியோலை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய எம்.பி.யுமான சுனில் ஜாக்கர் போட்டியிடுகிறார்.