
நாடே மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கியது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 7-ஆவது மற்றும் இறுதி கட்டத் தேர்தல், இன்று காலை தொடங்கியது. 8 மாநிலங்களில் மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதிகபட்சமாக பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா 13 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சண்டிகர் மாநிலத்தில் மீதமுள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
இதில், பிரதமர் மோடி உள்பட மொத்தம் 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, 10.01 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையம், 1.12 லட்சம் வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளது.