
கோப்புப்படம்
மேற்கு வங்க முதல்வர் பதவியிலிருந்து விலக தாம் விரும்பியதாகவும், ஆனால் தனது கட்சி அதனை நிராகரித்துவிட்டதாகவும் மம்தா பானர்ஜி சனிக்கிழமை தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 22 இடங்களில் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதேசமயம், பாஜக 18 தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்தது. இது, திரிணமூல் காங்கிரஸூக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, கொல்கத்தாவில் முதல் முறையாக மம்தா பானர்ஜி செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தின்போது, முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக எனது விருப்பத்தை தெரிவித்தேன். ஆனால், கட்சி அதனை நிராகரித்ததுடன், பதவியில் நீடிக்குமாறு கூறிவிட்டது.
மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்றுள்ள பெரும் வெற்றி, சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் முழுமையாக துடைத்தெறியப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. இதில் வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. மேற்கு வங்கத்தில் தேர்தல் வெற்றிக்காக அவசர காலகட்டத்தைப் போன்ற சூழலை பாஜக ஏற்படுத்தியது என்றார் மம்தா.