
பீனிக்ஸ் பறவையைப் போல முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா அரசியலில் மீண்டும் வெல்வார் என மஜதவைச் சேர்ந்த உயர்கல்வித் துறை அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மக்களவைத் தேர்தலில் மக்கள் கூட்டணி அரசுக்கு சாட்டைவீசி புத்திமதி சொல்லியிருக்கிறார்கள். அடுத்த 4 ஆண்டுகாலத்துக்கு நல்லாட்சி வழங்க மக்கள் எச்சரித்திருக்கிறார்கள். ஓராண்டுகால ஆட்சி நிறைவடைந்துள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் மக்களின் விருப்பங்களுக்கு தகுந்தவாறு நல்லாட்சி நடத்துவோம். இந்த காலக்கட்டத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம்.
மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததால் மஜத தலைவர்கள் யாரும் வேதனை அடையவில்லை. கட்சி நிர்வாகிகளுடன் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா ஆலோசனை நடத்தியுள்ளார். தும்கூரில் அவர் தோல்வி அடைந்ததால் சோர்ந்திருக்கலாம். ஆனால், பீனிக்ஸ் பறவையைப் போல அரசியலில் எச்.டி.தேவெ கெளடா மீண்டும் வெல்வார். பிரதமர் பதவியில் இருந்து இறங்கிய போதும் பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுவேன் என்று கூறியிருந்தார். மாநில வளர்ச்சிக்கு எச்.டி.தேவெ கெளடா தொடர்ந்து பங்காற்றுவார்.
மண்டியா தொகுதியில் தோல்வி அடைந்துள்ள நிகில் குமாரசாமியும் துவண்டுவிடவில்லை. தோல்விதான் வெற்றிக்கு அடித்தளம் என்பதை நிகில் நன்றாக உணர்ந்திருக்கிறார். ஹாசன் தொகுதியில் வென்றுள்ள மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, தனது தாத்தா எச்.டி.தேவெ கெளடாவுக்காக பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக கூறியுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக தான் தனது தொகுதியை தேவெ கெளடா விட்டுக்கொடுத்திருந்தார்.
இப்போது அதே தொகுதியை தேவெ கெளடாவுக்காக விட்டுக்கொடுப்பேன் என்பது இப்போதைக்கு சரியல்ல. எனவே, நன்றாக பணியாற்றுமாறு பிரஜ்வல் ரேவண்ணாவை தேவெ கெளடா கேட்டுக்கொண்டிருக்கிறார் என்றார் அவர்.