சென்னை: புது தில்லியில் மே 30ம் தேதி நடைபெற உள்ள பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் தர்பார் திரைப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்க நாளை மும்பை செல்கிறார். மும்பையில் இருந்து மே 30ம் தேதி தில்லி சென்று மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மே 30ம் தேதி இரவு 7 மணிக்கு புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. நட்பு ரீதியாக இவ்விழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, நாட்டின் பிரதமராக, இரண்டாவது முறையாக, நரேந்திர மோடி, வரும் 30-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்த விழாவுக்காக, குடியரசுத் தலைவர் மாளிகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
30-இல் பிரதமராக மோடி பதவியேற்பு: குடியரசுத் தலைவர் மாளிகையில் விரிவான ஏற்பாடுகள்
முன்னாள் பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்குப் பிறகு, தனிப்பெரும்பான்மையுடன் 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்து தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கும் தலைவர்களின் வரிசையில் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளார்.