

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நஸீராபாத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் 12ம் வகுப்பு படிக்கும் ஃபர்கான் குரேஷி என்ற 16 வயது மாணவன் மே 26ம் தேதி மாலை தனது ஸ்மார்ட் போனில் பப்ஜி விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுடன் அதே அறையில் தங்கை பிஸாவும் இருந்தார். அப்போது திடீரென ஃபர்கான் சுடு சுடு என்று கத்தியுள்ளான். பிறகு, உன்னால் எனது ஆட்டமே தோற்றுவிட்டது. இனி உன்னுடன் விளையாட மாட்டேன் என்றும் கத்தியுள்ளான். அப்போது திடீரென அவன் தரையில் சுயநினைவில்லாமல் விழுந்ததைப் பார்த்த குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் கடுமையான மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாகக் கூறினர். வெகு நேரம் மன அழுத்தத்துடன் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்து, அதில் தோல்வி அடைந்ததால் ஃபர்கான் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அவன் செல்போனில் பைத்தியமாக இருப்பதைப் பார்த்து அவனிடம் இருந்து செல்போனை பிடுங்கி வைத்திருந்தோம், இரண்டு மூன்று நாட்களாக அவன் உணவே எடுத்துக் கொள்ளாமல் பிடிவாதமாக இருந்ததால்தான் செல்போனைக் கொடுத்தோம். ஆனால் இப்படி நடக்கும் என்று நினைக்கவேயில்லை என்று சொல்லி கதறுகிறார்கள் அவனது பெற்றோர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.