காக்னிஸண்டைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனமும் ஆயிரக்கணக்கில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் (ஐடி) துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் இன்ஃபோசிஸ், 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட படிநிலையில் பணிபுரியும் ஊழியர்கள் என இல்லாது பல்வேறு படிநிலைகளில் இருந்தும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வெளியான தகவலின்படி, 6-ஆம் நிலை ஊழியர்களே சதவிகிதத்தின்படி அதிகப்படியாக பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர். இதில் பணிபுரியும் மொத்த ஊழியர்களுள் 10 சதவீத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர். இது சுமார் 2,200 ஊழியர்களை உள்ளடக்கும். இந்த நிலையில் பணிபுரியும் ஊழியர்கள் நிறுவனத்தின் மூத்த மேலாளர்கள் ஆவர்.
3-ஆம் பணி நிலை மற்றும் அதற்குக் கீழ் நிலையில் உள்ள ஊழியர்கள் மற்றும் 4 மற்றும் 5-ஆம் பணி நிலையான மத்தியப் பணி நிலை ஊழியர்கள் பிரிவில் மொத்தம் 2 முதல் 3 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில்தான் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலைகளில் ஏறத்தாழ 2,00,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
971 மூத்த நிர்வாகிகளில், 2 முதல் 5 சதவீத பேரை பணியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படவுள்ளார்கள். அதாவது, உதவி துணைத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மூத்த துணைத் தலைவர்கள் என மொத்தம் 50 மூத்த நிர்வாகிகள் பணியில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.
முன்னதாக மற்றொரு முன்னிணி ஐடி நிறுவனமான காக்னிஸண்ட், 7,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனமும் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது ஐடி துறையில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.