புது தில்லி: அயோத்தி வழக்கில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்திருக்கும் உச்ச நீதிமன்றம், அதே நேரம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
அயோத்தி வழக்கில் ராமஜென்மபூமியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை அளித்துள்ளது.
அதே சமயம், வக்ஃபு வாரியம் ஏற்றுக் கொள்ளும் இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலம் ஒதுக்குமாறும் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது.
ராமர் பிறந்த இடத்தைக் கைப்பற்றுவதாகக் கூறி, இந்து கரசேவகர்கள், பாபர் மசூதியை இடித்தனர். இதனால் ஏற்பட்ட மதக் கலவரத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.