அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து நவம்பர் 17-இல் நடைபெறவுள்ள ஏஐஎம்பிஎல்பி கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என மூத்த வழக்குரைஞர் ஜிலானி தெரிவித்துள்ளார்.
அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய அந்த இடம் ஹிந்துக்களுக்கே சொந்தமானது என்றும், அங்கு ராமர் கோயில் கட்டலாம் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த சனிக்கிழமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அதேசமயம், முஸ்லிம்களுக்கு அயோத்தியிலேயே வேறு இடத்தில் மசூதி அமைக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், உத்தரப் பிரதேச சன்னி மத்திய வக்ஃபு வாரியம் உட்பட முஸ்லிம் தரப்புக்கள் சார்பாக வாதாடிய மூத்த வழக்குரைஞர் ஜஃபர்யாப் ஜிலானி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,
"நவம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் (ஏஐஎம்பிஎல்பி) கூட்டத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.