
உச்ச நீதிமன்றம்
லக்னௌ: அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்வதென்று இஸ்லாமிய அமைப்புக்கள் முடிவு செய்துள்ளன.
அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பிற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் மேல்முறையீடு செய்யுமா என்ற கேள்வி நிலவி வந்தது.
இந்நிலையில் அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்வதென்று இஸ்லாமிய அமைப்புக்கள் முடிவு செய்துள்ளன.
உத்தரப்பிரதேசத்தின் லக்னௌவில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் (All India Muslim Personal Law Board - AIMPLB) மவுலானா வாலி ரஹ்மானி தலைமையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது.
இஸ்லாமிய அமைப்பான பாபர் மசூதி நடவடிக்கை குழு மற்றும் சன்னி வகுப்பு வாரியம், அசாதுதீன் ஓவைசியின் கட்சியான அகில இந்திய மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிமீன் உள்ளிட்ட அமைப்புகள் கூட்டத்தில் கலந்துகொண்டன.
உச்ச நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை ஏற்பதா அல்லது வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்வதா என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனையின் முடிவில் அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு தக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.