மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே இன்று (வியாழக்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், துணை முதல்வர் பதவி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர முதல்வராக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்கிறார். இவருடன் இணைந்து பதவியேற்கும் அமைச்சர்கள் குறித்து சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். எனினும், இதுகுறித்த தகவலை தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் ஜெயந்த் பாட்டீல், பிரபுல் பாட்டீல், சரத் பவார் மற்றும் அஜித் பவார் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார், "நான் இன்று பதவியேற்கவில்லை. மூன்று கட்சிகளிலும் இருந்து தலா 2 தலைவர்கள் என மொத்தம் 6 பேர் இன்று பதவியேற்கின்றனர். துணை முதல்வர் பதவி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்றார்.
முன்னதாக, சிவசேனைக்கு முதல்வர் பதவி மற்றும் 15 அமைச்சர்கள் பதவி, தேசியவாத காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி 13 அமைச்சர்கள் பதவி மற்றும் காங்கிரஸுக்கு சபாநாயகர் மற்றும் 13 அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது. எனவே, உத்தவ் தாக்கரேவுடன் இணைந்து துணை முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் சிலர் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே, இன்றைய பதவியேற்பு விழாவில் பதவியேற்கும் தலைவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மூன்று கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மகாராஷ்டிர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.