
காவல்துறை உதவி, தீயணைப்பு மற்றும் மருத்துவ சேவைக்காக புதிய ஒருங்கிணைந்த அவசர எண்ணாக 112யை கோவா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அவசர காவல்துறை சேவைக்காக பிரபலமான '100' என்ற எண் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் எந்த ஒரு இடத்தில் என்ன பிரச்னை என்றாலும் '100' என்ற எண்ணுக்கு டயல் செய்தால் நேரடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சென்று உடனடியாக சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர். இதேபோன்று தீயணைப்பு துறைக்கு 101 மற்றும் அவசர மருத்துவ சேவை(ஆம்புலன்ஸ்) 102 என அவசர எண்கள் உள்ளன.
இந்நிலையில், இவை அனைத்திற்கும் ஒரே எண்ணாக '112' என்ற சேவை எண் கோவாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை, தீயணைப்பு, மருத்துவ சேவை என பொதுவாக ஒரே எண் வழங்கப்படும்போது சம்மந்தப்பட்டவர்களுக்கு பதில் அளிக்கும் நேரம் குறையும். அவர்கள் ஒரே நேரத்தில் மூன்று துறையில் உள்ளவர்களையும் தொடர்புகொள்ள முடியும். குற்றங்களும் பரவலாகத் தடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ப்ரோமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியுடன் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 112 சேவையில் காவல்துறை சேவை வழங்கப்படும்; அடுத்த கட்டமாக மருத்துவ சேவை, தீயணைப்பு சேவை என இரண்டாம் கட்டத்தில் கொண்டு வரப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவாவில் இரண்டு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, இந்தியா முழுவதும் அவசர உதவிகளுக்கான ஒரே எண்ணாக 112யை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் அமல்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G