
நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில், மனுதாரரான பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் தில்லி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை குறுக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, இந்த முறைகேட்டில் பாதிக்கப்பட்டவர்கள் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் என்று அவர் விளக்கமளித்தார்.
மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேருவால், கடந்த 1938ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு ஆங்கிலப் பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்தப் பத்திரிகையை மேம்படுத்த ரூ.90.25 கோடி அளவுக்கு காங்கிரஸ் கட்சி வட்டியில்லா கடன் அளித்ததைக் காரணம் காட்டி, அதன் பதிப்பாளரான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை ராகுல், சோனியா உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தியது.
இதன் மூலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் அபகரித்துவிட்டதாகக் குற்றம்சாட்டி, சுப்பிரமணியன் சுவாமி தில்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தில்லி கூடுதல் தலைமை பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. நீதிபதி சமர் விஷால் முன்னிலையில், சுப்பிரமணியன் சுவாமியிடம் எதிர்த்தரப்பு வழக்குரைஞர் ஆர்.எஸ்.சீமா குறுக்கு விசாரணை நடத்தினார்.
அப்போது, இந்த முறைகேட்டில் பாதிக்கப்பட்டது அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் என்று புகாரில் குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பாக வழக்குரைஞர் கேள்வியெழுப்பினார்.
அதற்கு, முறைகேட்டில் பாதிக்கப்பட்டவர்கள், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள்தான். அதுவே சரியானது. புகாரில் அச்சுப் பிழை ஏற்பட்டிருப்பதாக கருதுகிறேன் என்று சுப்பிரமணிய சுவாமி விளக்கமளித்தார். இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 29-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.