
குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானின் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளை அப்படியே ஒப்பிக்க வேண்டும் என்கிற மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவை, உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. ராணுவ நீதிமன்றத்தின் விசாரணைக்குப் பிறகு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்தது.
ஒருதலைபட்சமான இந்த தீர்ப்பை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதனை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி உத்தரவிட்டது. அத்துடன் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கான சர்வதேச ஒப்பந்தங்களின்படி, குல்பூஷண் ஜாதவுக்கு வேண்டிய சட்டரீதியிலான உரிமைகளையும், தூதரக உதவிகளையும் காலதாமதமின்றி உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கைதிகளுக்கான வியன்னா ஒப்பந்தங்களின் படி குல்பூஷன் ஜாதவை தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி வழங்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஞாயிறன்று தெரிவித்திருந்தது.
இதன்படி, குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா இன்று (திங்கள்கிழமை) சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக நீடித்தது என்று பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், குல்பூஷண் ஜாதவ் மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"விரிவான அறிக்கைக்காக காத்திருக்கிறோம். எனினும், குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானின் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளை அப்படியே ஒப்பிக்க வேண்டும் என்கிற மிகுந்த அழுத்தத்தில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. நமது தூதரக அதிகாரி விரிவான அறிக்கை அளித்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.
குல்பூஷண் ஜாதவுக்கு விரைவில் நீதி கிடைத்து, அவர் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என்பதில் அரசு உறுதி பூண்டுள்ளது" என்றார்.