இடுக்கி: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், தாயின் மடியில் இருந்த ஒரு வயது பெண் குழந்தை, ஓடும் காரில் இருந்து விழுந்து உயிர் பிழைத்த அதிசயம் விடியோவில் பதிவாகியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமாலா வாகனச் சோதனை சாவடிக்கு அருகே மிக அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, வாகனத்தில் இருந்து குழந்தை விழும் போது பின்னால் எந்த வாகனமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பெற்றோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, தாயின் மடியில் இருந்த பெண் குழந்தை ஓடும் காரில் இருந்து தவறி சாலையில் விழுந்தது.
சாலையில் விழுந்த குழந்தை மெதுவாக தவழ்ந்து சாலையின் தடுப்புக்கு அருகே வந்தது. குழந்தை அழும் சத்தத்தைக் கேட்ட அதிகாரிகள் உடனடியாக குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பல கிலோ மீட்டர் சென்ற பிறகுதான், காரில் குழந்தை இல்லாததை அறிந்து பெற்றோர் பதறினர். உடனடியாக காரின் எண்ணைக் கொண்டு அதிகாரிகள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பெற்றோர் வெள்ளத்தூவல் காவல் நிலையத்துக்கு வந்து நடைமுறைகளை முடித்துக் கொண்டு அதிகாலை 1.30 மணியளவில் குழந்தையைப் பெற்றக் கொண்டனர்.
இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.