சென்னை: இந்தியப் பொருளாதாரம் 5 லட்சம் கோடி ரூபாயாக உயர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, பொருளாதாரம் வேகமாக வளர ஜிஎஸ்டி உதவுகிறது. ஃபிட் இந்தியா திட்டத்தின் கீழ் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை பராமரிக்க ஊக்கமளிக்கப்படும்.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணையாக 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இது தவிர ஓய்வூதியமாக ரூ.3000 வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு தேர்தலின் போதும் பாஜக தரப்பில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370 சட்டப்பிரிவு நீக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதையே பாஜக நிறைவேற்றியுள்ளது. 370 நீக்கப்பட்டதால் காஷ்மீரின் உள்ளூர் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான இட ஒதுக்கீடு காஷ்மீரில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சந்திராயன் - 2 திட்டம் 99.9% வெற்றி பெற்றுள்ளது. இஸ்ரோ திட்டங்களுக்கு தொடர்ந்து மத்திய அரசு ஊக்கமளிக்கும். ஆதரவு தரும்.
சிறிய வங்கிகள் ஒருங்கிணைப்பு இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். வங்கிகள் ஒருங்கிணைப்பு நடவடிக்கை குறித்து அந்தந்த வங்கி நிர்வாகமே முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், 2022க்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு மற்றும் எரிவாயு இணைப்பு கிடைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
வாகன விற்பனை சரிவு ஏன்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பல்வேறு காரணங்களால் வாகன விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. நிலைமையை சரி செய்ய நிதித் துறை அமைச்சகம் சார்பில் ஆலோசனைகளை நடத்தியுள்ளோம் என்றும் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.