சமூகத்தின் வளர்ச்சியை இடஒதுக்கீடு மட்டுமே உறுதிப்படுத்துவதில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது:
முன்னாள் மத்திய அமைச்சரும், சோஷலிஸ்ட் தலைவருமான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் எந்த ஜாதியைச் சார்ந்தவரும் இல்லை. அவர் கிறிஸ்தவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஜாதி காரணமாகவா பிரதமரானார்? ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உங்கள் ஜாதியா? ஆனால், அவர் தற்போது ராஜஸ்தான் முதல்வராக உள்ளார்.
மற்ற ஜாதியினரும் வாக்களித்ததன் காரணமாகவே அவரால் முதல்வராக முடிந்தது. பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று மக்கள் என்னிடம் கூறினர். அப்போது பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கூறுவேன். சமூகத்தின் வளர்ச்சியை இடஒதுக்கீடு மட்டுமே உறுதிப்படுத்துவதில்லை.
இந்திரா காந்தி இடஒதுக்கீடு பெற்றாரா? ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் இடஒதுக்கீடு பெற்றார்களா? இவர்கள் யாரும் ஜாதியை அடிப்படையாக வைத்து அவர்களின் இடத்தைப் பெறவில்லை. அரசியலைப் பொருத்தவரை சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்கள் வாக்கு சேகரிக்க மக்களை நாடிச் செல்ல வேண்டாம். அவர்கள் தாமாகவே வாக்குகளைப் பெறுவார்கள். பிரதமர் மோடி இதுவரை தனது ஜாதியைக் குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததில்லை. இதற்காக அவரைப் பாராட்டுகிறேன் என்று கட்கரி தெரிவித்தார்.