லஞ்சக் குற்றச்சாட்டு அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மேற்கு வங்க பாஜக தலைவர் முகுல் ராயை கைது செய்வதற்கான இடைக்காலத் தடையை நவம்பர் 8ஆம் தேதி வரை கொல்கத்தா உயர்நீதிமன்றம் நீட்டித்தது.
முகுல் ராய் உதவியுடன் ரயில்வே பயனாளர்கள் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக சேர்ப்பதாகக் கூறி, தன்னிடம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பபன் கோஷ் என்பவருக்கு எதிராக தொழிலதிபர் சாந்து கங்குலி கொல்கத்தா நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து பபன் கோஷை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, முன்ஜாமீன் கோரி முகுல் ராய் நீதிமன்றத்தை நாடினார். அவரை கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்த விவகாரம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஆய்வு செய்ய கூடுதல் நேரம் தேவைப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முகுல் ராய் தொடர்புடைய வழக்கை நவம்பர் 5ஆம் தேதிக்கு நீதிபதிகள் எஸ்.முன்ஷி, எஸ்.தாஸ்குப்தா ஆகியோர் ஒத்திவைத்தனர். அத்துடன், அவரைக் கைது செய்வதற்கான இடைக்காலத் தடையை நவம்பர் 8ஆம் தேதி வரை நீட்டித்தனர்.