அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு, பிரதமர் மோடி பயணித்த விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 மணி நேரம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் வருகிற 22-ஆம் தேதி 'மோடி நலமா?' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்-ம் கலந்துகொள்கிறார். இரு நாட்டுத் தலைவர்களும் ஒரே மேடையில் உரையாற்றவிருக்கும் இந்த நிகழ்வு உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையடுத்து, அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் சபையின் 74-ஆவது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் வரும் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் வரும் 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின் போதும், பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வுகளுக்காக இன்று அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு பிரதமர் மோடி, ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், திடீரென விமானத்தின் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெர்மனியின் ஃபிரான்க்பர்ட் நகரில் விமானம் நிறுத்தப்பட்டது.
ஜெர்மனி வந்த பிரதமர் மோடியை அந்நாட்டின் இந்தியத் தூதர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டு 2 மணி நேரத்திற்கு பின்னர், பிரதமர் மோடி அதே விமானத்தில் அங்கிருந்து புறப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.