

புது தில்லி: இந்தியாவில் தற்போது கரோனா தொற்று நோயால் மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், புணே, இந்தூர், மேற்கு வங்க மாநிலத்தின் மேலும் சில பகுதிகளில் அபாய சூழ்நிலை இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை மேலும் தளர்த்துவது குறித்து ஆலோசித்து வரும் நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில், குறிப்பாக மத்தியப் பிரதேசத்தின் இந்தூர், மகாராஷ்டிரத்தின் மும்பை மற்றும் புணே, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, ஹௌரா, கிழக்கு மெதினாபுர், வடக்கு 24 பர்கனாஸ், டார்ஜலிங், கலிம்போங்க், ஜல்பைகுரி உள்ளிட்ட பகுதிகளில் சூழ்நிலை மிக மோசமாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது என்பது பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்றும் அது எச்சரித்துள்ளது.
முன்னதாக, கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், ஏப்ரல் 20-ம் தேதி சில பணிகளுக்கு மட்டும் தளர்வு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கரோனா பாதிப்பு குறைந்திருப்பதாகக் கூறி சில மாநில அரசுகள், ஊரடங்கை மேலும் தளர்த்த முடிவெடுத்து வரும் சூழ்நிலையில் மத்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.